தமிழ்நாட்டில் அதிமுக, திமுக விற்கு மட்டும் தான் ஆட்சி செய்ய திறமை இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டை ஆளும் தகுதி உடைய ஒரு கட்சி பாமக தான் என கூறினார்.
பாமக தொடங்கி 34-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மேடையில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், மற்ற கட்சிகளெல்லாம் யாரோ துவங்கி, தற்போது வழி நடத்தி வருகிறார்கள், ஆனால் பாமக மருத்துவர் ராமதாஸ் அவர்களால் தொடங்கப்பட்டு இன்றும் வழிநடத்தப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகத்தில் அதிமுக, திமுக விற்கு மட்டும் தான் ஆட்சி செய்ய திறமை இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ் தமிழகத்தை ஆளும் தகுதி உடைய ஒரே கட்சி பாமக தான் என்றார். இந்தியாவிலேயே நீட் தேர்வுக்காக அதிக குழந்தைகள் உயிரிழப்பு செய்துள்ள மாநிலம் தமிழகம் தான் என கூறினார். இவர்களது மன நிலையை புரிந்து கொள்ளாத மத்தியில் ஆட்சி செய்பவர்கள் தான் ஆட்சியாளர்களாக? என சாடினார்.
ஒவ்வொரு நாளும் டிவியைப் பார்க்கும் போது பதறுவதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் நீட் தேர்வில் மாணவ மாணவிகள் போட்டி போட முடியாததற்கு காரணம் இந்த 50 ஆண்டுகளுக்கு மேலான திராவிட ஆட்சி தான் என்றார். 5 ஆண்டு காலம் எங்கள் கையில் ஆட்சியை கொடுத்து பாருங்கள், வெறும் 5 ஆண்டு காலம். நாங்கள் என்னென்ன மாற்றங்களை கொண்டு வருகிறோம் பாருங்கள் என கூறினார்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பான காலத்தில் தமிழ்நாட்டில் மொத்தத்தில் 70 முதல் 80 பள்ளி கூடங்கள் தான் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததோ அதன் பிறகு அத்தனையும் தனியார் பள்ளிகள் தான். பாட்டாளி மாடல் என்றால் இலவச, கட்டாய, தரமான கல்வி. எங்களிடம் 5 வருடம் ஆட்சியை கொடுத்து பாருங்கள் நாங்கள் இலவச கல்வியை சாத்தியமாக்கி காட்டுகிறோம்
பொறியியல், மருத்துவம் என அனைத்திற்கும் நீங்கள் ஒரு பைசா கூட கட்ட கட்டனமாகவோ அல்லது நன்கொடையாகவோ கூட கட்ட வேண்டாம். முற்றிலும் இலவசம் என்பதை நாங்கள் செய்து காட்டுகிறோம் உங்களுக்கு பாட்டாளி மாடல் வேண்டுமா? திராவிட மாடல் வேண்டுமா? இன்று சுகாதாரம் என்று சொன்னாலே தமிழ்நாடு மட்டும் அல்ல அனைவருக்கும் தெரியும் பாமக தான்.
டெல்லியில் நான் ஐந்து வருடம் இருந்தேன், இன்றும் டெல்லியில் போய் கேளுங்கள், மருத்துவ துறை என்றாலே அன்புமணி என்ற பெயரை தான் சொல்வார்கள் மத்தியில் இருந்த அமைச்சர்களின் தரவரிசையை பார்க்கும் போது, நம்பர் ஒன் அன்புமணி ராமதாஸ், நம்பர் 2 ப.சிதம்பரம், நம்பர் 3 பாமக வின் அரங்கவேலு என தெரிவித்தார். நீர் மேலாண்மை நீர் மேலாண்மை குறித்து நாங்கள் வீடு வீடாக, தெரு தெருவாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்கள் கொடுத்த பிறகு தான் நீங்கள் நீர் மேலாண்மையை குறித்து சிந்திக்கின்றீர்கள்.
இன்று கூட நான் ஒரு வீடியோ பார்த்தேன், தர்மபுரியில் பூஜை போட்டு கொண்டிருந்த போது, ஒரு நபர் இது திராவிட மாடல், எனவே பூஜை போட கூடாது என சொல்கிறார். திராவிட மாடலில் பூஜை போட கூடாதா? தேர்தல் நேரத்தில் ஆரத்தி எடுத்த போதெல்லாம் வணக்கம் வைக்கிறீர்கள், அப்போது திராவிட மாடல் இல்லையா? தமிழகத்தில் மத ரீதியாக, இனம் ரீதியாக மற்ற கட்சிகள் எல்லாம் மக்களை பிரித்து கொண்டிருக்கும் பொழுது, பாமக மக்களை இணைத்துக் கொண்டு இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
– இரா.நம்பிராஜன்