கர்நாடகாவில் ஒரு வீட்டுக்கு மின் கட்டணம் 7.71 லட்சம் ரூபாய் வந்ததால், வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கர்நாடகத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஜூலை 1-ம் தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மாதந்தோறும் 5-ம் தேதி மின்சார பயன்பாட்டை அளவீடு செய்து கட்டண ரசீது வழங்குவது வழக்கம்.
இந்த நிலையில், தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லாலை சேர்ந்தவர் சதாசிவ ஆச்சார்யா. கடந்த மே மாதம் இவரது வீட்டுக்கு மின்சார கட்டணமாக ரூ.7,71,072 வந்துள்ளதாக மின்அளவீடு செய்த மின்வாரிய ஊழியர் ரசீது கொடுத்துள்ளனர். அந்த ரசீதில் 99,338 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சதாசிவ ஆச்சார்யா, மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். மின் அளவீடு செய்வதில் இந்த குளறுபடி நடந்து இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். பின்னர் அதிகாரிகள் ரூ.2,833 மின்கட்டணமாக செலுத்தும்படி கூறி புதிய மின்கட்டண ரசீதை வழங்கியுள்ளனர். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.







