மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட பாஜக மாநில நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீரில் தூய்மை பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொன்னதாகவும், அதனால் ஒவ்வாமை ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாக பாஜக மாநிலச் செயலாளராக இருக்கும் எஸ்.ஜி.சூர்யா என்பவர் தன்னுடைய ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் கடந்த ஜூன் 7-ம் தேதி பதிவிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், சம்பந்தப்பட்ட தொழிலாளி பட்டியலினத்தைச் சார்ந்தவர் எனவும், இதனால் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார். இதனைக் கண்டு கொள்ளாமல் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ளமௌனம் காக்கிறார் எனவும் எஸ்.ஜி. சூர்யா பதிவிட்டார்.
எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 12-ம் தேதி, மதுரை
மாநகர காவல் ஆணையரிடம் மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ”மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீதும் அவதூறு செய்திகளை பரப்பும் பாஜக நிர்வாகியான எஸ்.ஜி.சூர்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்துள்ள மதுரை மாநகர சைபர் கிரைம்
காவல்துறையினர், நேற்றிவு சென்னை தியாகராய நகரில் வைத்து எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தனர். இதையடுத்து சென்னையிலிருந்து இரவோடு இரவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் எஸ்.ஜி.சூர்யா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை 15 நாட்கள், அதாவது ஜூலை 1-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட ஒன்றாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ராம் சங்கரன் உத்தரவிட்டார்.