கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி பலசரக்கு கடைக்குள் புகுந்ததில் கடை உரிமையாளர் உயிரிழந்தார். மேலும் விபத்தில் படுகாயமடைந்தவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை, உசிலம்பட்டி அருகே, கன்னுார் கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவர் அந்த ஊரில் சாலையோரம் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். செக்காணுாரணியிலிருந்து கன்னுார் வழியாக கரகப்பட்டிக்கு சென்ற மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்து, கடையில் அமர்ந்திருந்த பிரபு மீது லாரி மோதியது. இந்த விபத்தில் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மினி லாரியில் வந்த கரடிப்பட்டியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.
சம்பவ இடத்திற்கு அருகில் இருந்தவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; அங்கு அவர்களுக்கு
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த செக்காணுாரணி காவல் நிலைய போலீசார் கடை உரிமையாளர் பிரபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
அனகா காளமேகன்






