மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும் வேளையில், தன்னுடைய இருப்பை நிரூபிக்க ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு வருகிறார் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காணொளி வாயிலான ஆய்வுக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாக துறை
அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் சென்னை ரிப்பன் மாளிகையில் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ரிப்பன் மாளிகையில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வரும் நிலையில் மக்களின் நேரடி புகார்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு மற்றும் ஆணையர் ககன் தீப் சிங் பேடி கேட்டறிந்தனர்.
பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “கடந்த ஆண்டு மழைநீர் தேங்கிய இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்றதால், மழைநீர் அதிகம் இந்த ஆண்டு தேங்கவில்லை. நேற்று இரவிலிருந்து சென்னை மாநகராட்சியின் சார்பில் 19,500 பேர் பணியில் உள்ளனர். மழை நீர் வடிகால் இல்லாத இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மோட்டார்கள் கொண்டு அந்த பகுதிகளில் மழை நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னையில் புதிதாக தண்ணீர் தேங்கிய இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் எந்த பணியும் மேற்கொள்ளாமல், தற்போது தன்னுடைய இருப்பை நிரூபிக்க, வடிகால் பணிகளை விரைந்து முடியுங்கள் என பணிகள் நிறைவடையும் வேளையில் ஓபிஎஸ் அறிக்கை விட்டு வருகிறார்.
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் ஒரு லட்சம் பேர் தங்க வைக்கும் அளவில் முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. தேவையெனில் அவர்களுக்கு தேவையான தரமான உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, “எப்போதும் மழை நீர் தேங்கும் வால் டாக்ஸ் சாலையில், இன்று மழை நீர் தேங்கவில்லை. நெடுஞ்சாலை, மாநகராட்சி என துறைகள் வித்தியாசம் இன்றி பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் போர்க்கால அடிப்படையில் ராணுவத்தை போல் மாநகராட்சி பணியாளர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.