அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்திற்கு அதிக அளவில் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர். இதையடுத்து இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியவுடன், மற்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு, அதானி குழும முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
ஆனால், அதனை மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் தலைவர்களும் ஏற்க மறுத்தனர். இதனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.