பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது அரசு சுமையாக கருதாமல், கடமையாக கருதவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி வெயிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு நிதியமைச்சர் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என தெரிவித்திருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ள கருத்துக்கள் அடிப்படையில் பொருத்தமற்றதாகவும், உண்மைக்குப் புறம்பானதாகவும் இருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
1. ராஜஸ்தான் அரசுக்கு பி.எப்.ஆர்.டி. அனுப்பிய கடிதத்தை நிதியமைச்சர் மேற்கோள் காட்டுகிறார். தனிநபர் கணக்கில் இருக்கிற பணத்தை எடுக்கும் பிரச்சினை ராஜஸ்தான் அரசுக்கு இருக்கிறதே தவிர, தமிழக அரசு பி.எப்.ஆர்.டி.யில் சேரவில்லை என்கிற போது தமிழகத்திற்கு அந்தப் பிரச்னையே கிடையாது. எனவே இதை மேற்கோள்காட்டுவது பொருத்தமற்றதாகும்.
2. நிதியமைச்சர் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்கள் 15 லட்சம். ஆனால் 9 லட்சம் பேர் மட்டும் தான் தற்போது பணியில் இருக்கிறார்கள். எனவே நிரப்பப்படாத 6 லட்சம் பேரின் பணியையும் சேர்த்து, பணியில் இருக்கும் 9 லட்சம் பேர் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, நிதிச்சுமை என காரணம் காட்டுவது சரியல்ல.
3.ஜிஎஸ்டி, நீட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஒன்றிய அரசு எடுக்கிற நிலைபாடுகளிலிருந்து வேறுபடுகிற நிலையை தமிழ்நாடு அரசு சரியாகவே எடுத்திருக்கிறது. ஆனால் இந்தப் பிரச்னையில் மட்டும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய விஷயங்களைக் காரணம் காட்டுவது பொருத்தமல்ல.
4.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்குவதால் கூடுதல் நிதிச் செலவு ஏற்படும் என்றாலும் அரசின் திட்டங்களை அமல்படுத்தும் பணியில் பல்லாண்டு காலம் உழைத்த தனது ஊழியர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை மக்களுக்கான அரசு சுமை என கருதாமல், அதை தன் கடமையாக உணர்ந்து நிறைவேற்ற வேண்டும்.
எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தெளிவான அறிவிப்பினை வெளியிட முதலமைச்சர் உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.