கடந்தாண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 15 லட்சம் பேர் எழுதினர். குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி வெளியானது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முதலில் 7,301 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தியது. அதன் பின்னர் மறு அறிவிப்பாணை வெளியிடப்பட்டு 10,117 காலிப் பணியிடங்களுக்கு தகுதியுடையோர் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் இந்த எண்ணிக்கை அரசுப் பணியில் நாட்டம் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் நடத்தவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டு, காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக குரூப் 4 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன்படி எண்ணிக்கை 10,117ஆக இருந்த நிலையில், தற்போது 10,748ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்த அறிவிப்பு போட்டித்தேர்வர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.







