மத்திய அரசு பணிகளில் தமிழ்நாடு மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘நான் முதல்வன்’ திட்டமானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்றாகும். அதன்கீழ், நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவானது மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ்நாடு இளைஞர்கள் வெற்றி பெற, பயிற்சி மற்றும் பிற தேவையான உதவிகளை வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்துவதற்காகத் தொடங்கப்பட்டது.“ரயில்வே, வங்கி, எஸ்எஸ்சி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு” என்பது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவால் வடிவமைக்கப்பட்ட பயிற்சித் திட்டமாகும்.
இந்தப் பயிற்சித் திட்டத்தின் மூலம் தகுதியுடைய தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இலவச வகுப்புகள், தேர்வுகள், பாடப்புத்தகங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இப்பயிற்சி திட்டத்தின் மூலம் மத்திய அரசின் வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்காக நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 150 பேருக்கு, 100 நாட்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், இதற்கான பயிற்சி வகுப்புகள் மற்ற மாவட்டங்களில் கடந்த மே மாதம் செயல்பாட்டிற்கு வந்த நிலையில், தற்போது சென்னையில் இன்று மூன்று இடங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ரயில்வே, எஸ்.எஸ்.சி, மற்றும் வங்கி உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி மையத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். தொடங்கி வைத்த பின்னர் விழா மேடையில் பேசிய அவர் நான் முதல்வன் போட்டி தேர்வு மூலம் இரயில்வே, எஸ்.எஸ்.சி மற்றும் வங்கி போன்ற ஒன்றிய போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை துவக்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. தமிழ்நாடு கல்வியில் தலைசிறந்த மாநிலமாக சிறந்து விளங்கி வருகிறது. பள்ளிக்கல்வி, உயர்கல்வி தமிழ்நாட்டின் நிலை தேசிய சராசரியை விட அதிகமாக
விளங்கி வருகிறது. கலைஞர் தீட்டிய பல்வேறு கல்வி திட்டங்கள் மற்றும் அவரது சீரிய முயற்சி ஆகியவை தான் கல்வியில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்க முக்கிய காரணம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டு மாணவர்கள் பெரும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்றாலும் மத்திய அரசு வேளைகளில் தமிழ்நாடு மாணவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. ஒரு காலத்தில் UPSC தேர்வுகளில் 25 முதல் 30 சதவீத மாணவர்கள் வெற்றி பெற்றனர். இன்றைக்கு அந்த நிலை மாறி வருகிறது. வருட வருடம் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் இருபது குறைந்து கொண்டே வருகிறது. தமிழ்நாட்டு கிராம வங்கிகளில் ஹிந்தி மொழி பேசுவோர் தான் மேலாளர்களாக உள்ளனர். இதனால் முதியவர்கள் வங்கி சேவை பெறுவதில் சிரமப்படுகின்றனர். மொழி ஒரு தடையாக இருப்பதால் அரசு சேவை சென்றடைய சிக்கல் உள்ளது . எனவே தான் இந்த மத்திய அரசு தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்ச்சி அடைய இந்த நான் முதல்வன் போட்டித்தேர்வு திட்டம். மத்திய அரசு வேலைகளுக்கு பயிற்சி பெற டெல்லி தனியார் பயிற்சி மையங்களில் அதிக அளவு செலவில் தான் பயிற்சி பெற்று வந்தனர். ஏழை எளிய மக்கள் பயன் பெரும் வகையில் தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டதாக கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா









