தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படாதது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழகங்களில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதனால், மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். பட்டமளிப்பு விழாக்களுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அனுமதி அளிக்கப்படாதது தான் தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுவதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்துவதற்கு ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.







