திருமணமான 35 நாட்களிலேயே திருட்டு – “மாமியார் வீட்டில்” கம்பி எண்ணும் புது மாப்பிள்ளை…

சிதம்பரத்தை அடுத்த லால்புரம் பகுதியில் திருமணமான 35 நாட்களிலேயே திருட்டில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.  சிதம்பரத்தை அடுத்த லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமோதரன் நகர் பகுதியில் செல்வராசு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  கடந்த…

சிதம்பரத்தை அடுத்த லால்புரம் பகுதியில் திருமணமான 35 நாட்களிலேயே திருட்டில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார். 

சிதம்பரத்தை அடுத்த லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமோதரன் நகர் பகுதியில்
செல்வராசு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  கடந்த 2ஆம் தேதி உறவினர் சுப
நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றிருந்தனர்.  மீண்டும் நான்காம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 19 சவரன் தங்க நகைகள்,  அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.  இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராசு,  சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம்,  சிதம்பரம்
உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி,  குற்றப்பிரிவு உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ்
முருகன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தேடி வந்தனர்.  இந்நிலையில் சிதம்பரம் புரவழி சாலை, பொய்யாபிள்ளை சாவடி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது,  காரைக்கால் நோக்கி சென்ற கார் ஒன்று திடீரென போலீசாரை பார்த்தவுடன் மீண்டும் திரும்பியுள்ளது.

அப்போது செல்வராசு வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கார் நம்பரும் இந்த கார் நம்பரும் ஒன்றாக இருந்ததால் போலீசார் மடக்கி பிடித்தனர்.  பின்னர் விசாரணை செய்ததில் கடலூர் புதுதெரு,  மூணாவது குறுக்கு தெரு, புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயபாண்டியன் மகன் பிரவீன் (எ)பிரசாந்த் 33 என்பதும் அவரது நண்பர் ராஜேஷும் தான் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.  மேலும் மூன்றாம் தேதி நள்ளிரவு காரில் வந்து பல்வேறு வீடுகளில் டார்ச் லைட் அடித்துப் பார்த்ததும்,  அப்போது செல்வராசு வீடு பூட்டி இருப்பது தெரியவந்ததால் வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த 19 சவரன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருட்களை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து அவரிடம் இருந்து 19 சவரன் தங்க நகை,  அரை கிலோ வெள்ளி பொருட்கள், திருடுவதற்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.  மேலும் முக்கிய குற்றவாளியான ராஜேஷ் தலைமறைவாகி உள்ளார்.  அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  குறிப்பாக பிரவீன் என்கிற பிரசாந்துக்கு திருமணம் ஆகி 35 நாட்களே ஆகியுள்ளன.  இந்நிலையில்  திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு புது மாப்பிள்ளையை தற்போது கம்பி எண்ணுவதற்கு போலீசார் அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.