“மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி, தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும்..” – இபிஎஸ் பேட்டி

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி, தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலை உணவு விருந்து அளித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் இந்த உணவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்துக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் எனது இல்லத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி. பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறவுள்ள கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். நாளை நடைபெறும் கூட்டத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி அமையும்.

தமிழகத்தில் பொதுமக்கள், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல துறைகளில் ஊழல் நடந்துள்ளது. இந்த அரசு எல்லா துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி, தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும். மேக் இன் இந்தியா திட்டத்தை உருவாக்கி, இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றும் பணியில் பிரதமர் ஈடுபட்டு வருகிறார். எங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி. வலிமையான கூட்டணியாக விளங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி, வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும். அப்போது தமிழகம் இதுவரை இல்லாத வளர்ச்சியை அடையும். திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பான அறிக்கையை ஆளுநரிடம் வழங்கி உள்ளோம்”

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.