செங்கம் பேருந்து நிலையத்தில் இறந்தவர் திடீரென உயிருடன் எழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று நள்ளிரவில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இறந்த உடல் கிடப்பதாக செங்கம் காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, செங்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது இறந்த உடலில் மாலை மற்றும் நெற்றியில் ஒரு ரூபாய் உடன் இருந்ததைப் பார்த்துள்ளனர். இந்நிலையில், இறந்ததாக நினைத்தவர் திடீரென மாலையுடன் எழுந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், காவல் துறையினரின் விசாரணையில், கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த சென்ராயன் என்பவர் மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோவிலுக்கு மாலையுடன் சென்றதும், செங்கத்தில் மது அருந்தியதால் போதை அதிகமாகி செங்கம் பயணியர் கூடத்திலேயே படுத்து இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதனைப் பார்த்த சிலர் உண்மையிலேயே இறந்த உடலை மாலையுடன் இங்கு வீசிவிட்டுச் சென்றதாக நினைத்தபோது, போதை ஆசாமி மீண்டும் எழுந்த அதிர்ச்சி சம்பவம் செங்கத்தில் அறங்கேறி உள்ளது.







