31.4 C
Chennai
June 17, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

‘ஸ்டாலின் அங்கிள் என்னை படிக்க வைங்க…’ கூட்டத்தில் குரல் எழுப்பிய சிறுமி ! உதவிக்கரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்!

‘ஸ்டாலின் அங்கிள், என்னை படிக்க வைங்க’ … என கூட்டத்தில் குரல் எழுப்பிய சிறுமிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் உதவிக்கரம் நீட்டியுள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்து இறங்கிய போது, அங்கு பொதுமக்கள் பகுதியில் நின்றிருந்த 7 வயது சிறுமி திடீரென ‘ஸ்டாலின் அங்கிள், என்னை படிக்க வையுங்கள்’ என்று சத்தம்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்று தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரப்படும் கால்வாய்களை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவே சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார். அப்போது அவரை விமான நிலையத்தில் வரவேற்க திரளான திமுகவினரும், கோரிக்கை மனுக்களுடன் மக்களும் எதிர்பார்த்து நின்றிருந்த சமயத்தில், பொதுமக்கள் திரண்டு இருந்த பகுதியில் நின்ற 7 வயது சிறுமி திடீரென ‘ஸ்டாலின் அங்கிள், என்னை படிக்க வையுங்கள்’ என்று சத்தம் போட்டு அழைத்தார். ஆனால் அந்த சிறுமியின் குரல் முதலமைச்சரின் காதுகளுக்கு எட்டுவதற்குள் மு.க.ஸ்டாலின் அந்த இடத்தை கடந்து சென்றுவிட்டார்.

இதற்கிடையே சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அந்த சிறுமியிடம் விசாரித்தார். அப்போது, தனது குடும்பம் வறுமையால் வாடுவதாகவும், இதனால் பள்ளிக் கட்டணம் கூட செலுத்த முடியவில்லை எனவும் அந்த சிறுமி கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் பிரதீப்பிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரை படிக்க வைக்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்பும் உறுதியளித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சத்தம் போட்டு அழைத்து படிக்க உதவி கோரிய அந்த சிறுமியின் பெயர் காவ்யா. இவர் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். காவ்யாவின் தந்தை திருச்சி மாவட்டம்
மணப்பாறையை சேர்ந்தவர் என்றும், கடந்த 1 வருடத்துக்கு முன்பு அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது காவ்யா தனது தாய் கவிதா, சகோதரர் கவின்குமார் ஆகியோருடன் கோவை சிங்காநல்லூரில் வசித்து வருவதாகவும், தந்தையின் மறைவிற்கு பின்னர் குடும்பம் மிகவும் சிரமத்தில் இருப்பதால் பள்ளி கட்டணம் கூட செலுத்த முடியாமல் தவித்து வந்த நேரத்தில் தான், தாய் கவிதா தனது 2 குழந்தைகளுடன் திருச்சிக்கு வந்து ஒருவார காலமாக உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

இந்த சமயத்தில்தான் முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சிக்கு வருகிறார் என்ற தகவலறிந்து விமான நிலையத்திற்கு சென்ற காவ்யா குடும்பத்தினர் இரவு 9.30 மணி வரை காத்திருந்து
விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டதும், சிறுமி காவ்யா தன்னை படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கும்படி சத்தம் போட்டு தனது கோரிக்கையை வைத்திருக்கிறார். இது குறித்து அதிகாரிகள் தற்போது விசாரித்து வரும் நிலையில், இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading