பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “ஒரே நாளில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 142-வது கூட்டம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 57-வது கூட்டம் ஆகியவற்றில், இன்று காலை 8 மணி முதல் அடுத்த 15 நாட்களுக்கு, வினாடிக்கு 6000 கன அடி வீதம் 7.776 TMC தண்ணீரை கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டுமென பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை வரவேற்று மகிழ்கிறேன்.
கடந்த ஜூலை மாதம் CWMA -வால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கர்நாடக காங்கிரஸ் அரசு குறித்த நேரத்திற்கு முறையாக அமல்படுத்தாததால், தமிழகத்தின் குறுவை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் நலிவடைந்தது. கர்நாடக காங்கிரஸ் அரசின் இந்த அலட்சியப் போக்கால், டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதமே திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை நீர், இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் தான் திறக்கப்பட்டது. இதனால் குறுவை மற்றும் இதர சாகுபடி பயிர்கள் காய்ந்து போகும் தருவாயில் உள்ளன.
எனவே, தமிழக விவசாயிகளுக்கும், விளைப் பயிர்களுக்கும் புத்துணர்வு அளிக்கும் வகையிலான CWMA -வின் தற்போதைய உத்தரவையாவது கர்நாடக காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தாமல் அமல்படுத்துவதை, முதல்வர் விஜய் உறுதி செய்ய வேண்டும்! கர்நாடக காங்கிரஸ் அரசால் தமிழக விவசாயிகள் மீண்டுமொரு முறை வஞ்சிக்கப்படுவதை முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் வேடிக்கை பார்க்கக் கூடாது! கூட்டணிப் பாசத்தை விட, விவசாயிகளின் வாழ்வாதாரமே முக்கியம்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




