பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை படம் பார்க்க அனுமதிக்காத விவகாரத்தில் ரோகிணி திரையரங்கு ஊழியர்கள் மீது போடப்பட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவை நீக்கி, போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி நடிகர் சிம்பு நடித்த பத்து தல படம் வெளியானது. அன்று, சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிலரை, திரையரங்க ஊழியர்கள் படம் பார்க்க அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோயம்பேடு போலீசார், ரோகிணி திரையரங்கு ஊழியர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நடைபெற்ற விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கோயம்பேடு போலீசார், ரோகினி திரையரங்கு ஊழியர்கள் மீது போடப்பட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதையும் படியுங்கள் : ஒடிசா ரயில் விபத்து : சென்னை திரும்பும் பயணிகள்…. 30 மருத்துவக் குழுக்களுடன் தயார் நிலையில் தமிழ்நாடு…!!
பின்னர் அரசு வழக்கறிஞருக்கு இது தொடர்பான கோப்புகள் அனுப்பப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் எஸ்சி, எஸ்டி வன்கொடு தடுப்புச் சட்ட பிரிவு நீக்கப்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தக்கல் செய்தனர். மீதமுள்ள சட்டப்பிரிவான, சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் என்ற பிரிவின் கீழ் ஊழியர் குமரேசனை நேற்று கைது செய்த போலீசார், அவரை சொந்த பிணையில் விடுவித்தனர்.