அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில் மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, சென்னை அண்ணா பல்கலைக்கழக
வளாகத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு உள்ளிடோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இதில், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகப் பெயரை பயன்படுத்தி போலி டாக்டர் பட்டம் வழங்கியது தெரிய வந்தது. மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகத்தின் கையெழுத்து, முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, மூன்று மாதங்களில் விசாரணை அறிக்கையை உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.







