பிரபல பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேனை ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து வெளியே துரத்தியவர் மீது காவல்துறை ஆணையரிடம் கோயில் இணை ஆணையர் புகாரளித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 10ம் தேதியன்று பரத நாட்டியக் கலைஞரான ஜாகீர் உசேன் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்திற்குச் சென்றபோது, ரங்கராஜன் நரசிம்மன் என்பவரால் கோயிலைவிட்டு துரத்தியடிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜாகீர் உசேன் தனது முகநூலில் வருத்தம் தெரிவித்திருந்தார். “நான் தாய்வீடாக கருதும், தினமும் என் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை என்னரங்கனாக கணப்பொழுதும் மறவாது கருதிக் கொண்டிருக்கும் திருவரங்கத்திலிருந்து ஒரு மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டேன். காரணம் என் பெயர்.
இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனாலும் என் பற்று அரங்கனையும் ஆண்டாளையும் விட்டு அணு அளவும் அகலாது. காலம், திருப்பாணனை உள்ளழைத்தது போல் என்னையும் என் நம்பிக்கையையும் ஒருநாள் ஏற்கும். அரங்கன் என்றும் எமக்குத் துணை” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான கண்டனத்தை இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் என்னை ஆழமாக பாதித்துள்ளது. இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், தகாத வார்த்தைகளில் ஜாகீர் உசேனை திட்டியதாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மீது கோயில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
இது குறித்து “ஜாகீர் உசேன் வைணைவத்தின் மீது நம்பிக்கை கொண்டு பல முறை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்துள்ளார். ஆனால் தற்போது திடீரென ரங்கராஜன் நரசிம்மன் அவரை துரத்தி அடித்து அவர் மதத்தையும் திட்டியுள்ளார்.
ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கோயில் குறித்து பல பொய் செய்திகளை பரப்பி வருகிறார், தற்போது மத வேற்றுமையை தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளார் எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என கோயில் இணை ஆணையர் மாரிமுத்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகாரளித்துள்ளார்.







