ஏழு ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்த சாலையால் தனது தாத்தாவிற்கு அடிப்பட்டதால், வேறு யாருக்கும் அடிபடாமல் இருக்க, தனி ஒருவனாக சாலையை சீரமைத்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
புதுச்சேரி வில்லியனூர் – பத்துக்கண்ணு சாலையில் தினந்தோறும் ஏராளமான
வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக இச்சாலை
சீரமைக்கப்படாததால், ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக
மாறியுள்ளது. சில இடங்களில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால்
இவ்வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் தினமும் சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்து ரத்தக் காயங்களுடன் செல்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் சேந்தநத்தம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (60). இவர் கடந்த வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் இச்சாலையில் செல்லும் போது பள்ளத்தில் விழுந்து பிரேக் போட்டுள்ளார். அப்போது பின்பக்கமாக வந்த பைக் மோதி கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் சேகரின் பேரன், மாசிலாமணி (13) என்ற சிறுவன், தனது தாத்தா விழுந்த பள்ளத்தில் மற்றவர்கள் யாரும் விழுந்து அடிப்படக்கூடாது, ஏதேனும் உயிர் சேதம் ஏற்படக்கூடாது என்று எண்ணி சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
எத்தனையோ பணக்காரர்கள், அரசியல் வாதிகள் சென்று வரும் இச்சாலையில் ஒரு சிறுவன், தனி ஒரு ஆளாக நின்று ஆங்காங்கே கிடக்கும் சிமெண்ட் கற்கல், சாலையோரம் உள்ள மணல் ஆகியோவற்றை போட்டு சுத்தியால் தட்டி தண்ணீர் ஊற்றி மட்டம் செய்து சாலையை சீரமைத்துள்ளார். சிறுவனின் இச்செயலை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சிறுவனை பாராட்டிவிட்டு சென்றனர். சிறுவனின் இச்செயல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.