சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா குறித்து சில விளக்கங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கோரியிருந்த நிலையில், ஆளுநருக்கு ஓரிரு நாட்களில் பதில் அனுப்ப தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
மாநிலத்தின் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையை போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழகத்தில் தொடங்கப்படும் என கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழகத்தில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மாநிலத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா,யுனானி யோகா, ஓமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய துறைகளுக்கென தனிப்பல்கலைகழகம் நிறுவது தொடர்பான சட்டமுன்வடிவை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு இயல், இசை, கவின் கலை பல்கலைக்கழத்தை தவிர, பிற அனைத்து அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் தற்போது இருந்து வரும் நிலையில், புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அனைத்திற்கும் முதலமைச்சர் தலைமை வகித்து பட்டங்கள் பட்டயங்கள் அல்லது பிற கல்வி சிறப்பு சட்டங்கள் அனைத்தையும் வழங்குவார் எனவும், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், யுனானி யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டது
இந்த நிலையில், அந்த மசோதாவில் சில விளக்கங்கள் கோரி ஆளுநர் தமிழ்நாடு அரசிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சட்ட முன்வடிவை அனுப்பியிருந்தார். ஆளுநரின் கேள்விகளுக்கு பதில் தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆளுநரின் கேள்விகளுக்கான பதில், மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் ஒரிரு நாட்களில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.