தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம், ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசின் மீது தனக்குள்ள அதிருப்தியை வெளிபடுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே ஏற்படும் மோதல் என்பது மத்தியில் ஆட்சி செய்கிற கட்சி அந்த மாநிலத்தில் ஆட்சி செய்யும் போது பெரிய அளவில் தெரிவதில்லை. அதையும் மீறி எழும் பிரச்னைகள் பெரிதாக்கப்படுவதில்லை. ஆனால், மத்தியில் ஒரு கட்சியும், மாநிலத்தில் அதன் எதிர்க்கட்சியும் ஆட்சியில் இருக்கும்போது ஆளுநர் மற்றும் அந்த அரசுக்கு இடையிலான மோதல் போக்குகள் அதிகரித்து விடுகின்றன.
அந்த வரிசையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே ஏற்பட்டு வரும் கருத்து மோதல் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்தி மொழி சர்சை, சனாதனம், திருக்குறள் உள்ளிட்டவைகளில் எழுந்த விவாதம் நாள்தோறும் பேசப்பட்டு வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவிக்கும் கருத்துகளுக்கு, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சூசகமாக பதிலளிப்பதும், முதலமைச்சரின் கருத்துக்களுக்கு ஆளுநர் சூசகமாக பதிலளிப்பதும் தொடர்கதையாக இருக்கிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியாவின் சார்பில் வெளிநாடுகளில் வெளியுறவு அதிகாரிகளாக பணியாற்றும் சில ஐஎப்எஸ் அதிகாரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் நேரில் சந்தித்துள்ளனர். இதன் பின்னர், ஆளுநர் ஆர்.என்.ரவியையும் ஐஎப்எஸ் அதிகாரிகள் நேரில் சென்று சந்தித்து பேசும் போது தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
அப்போது, அதிகாரிகள் சிலர் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாகவும் ஆளுநரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை பெரிதும் ரசிக்காத ஆளுநர் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக திராவிட மாடல் கொள்கை குறித்து ஆளுநர் தனது விமர்சனத்தை ஐஎப்எஸ் அதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளதாகவும் தெரிகிறது.
ஐஎப்எஸ் அதிகாரிகளிடம் ஆளுநர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக வெளியான தகவல் ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையிலான மோதலை அதிகரிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.








