மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய அரசும், புதுச்சேரி அரசும் உடனிருக்கும் – ஆளுநர் தமிழிசை

மீனவர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் மத்திய அரசும், புதுச்சேரி அரசும் உடனிருக்கும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை இன்னும் இரண்டு தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுச்சேரி தவளக்குப்பம்…

மீனவர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் மத்திய அரசும், புதுச்சேரி அரசும் உடனிருக்கும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை இன்னும் இரண்டு தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுச்சேரி தவளக்குப்பம் பகுதிகளில் உள்ள பட்டாசு தயாரிக்கும் இடங்களை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் சபாநாயகர் செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

முறையான அனுமதி பெற்று பட்டாசு தயாரிக்கப்படுகிறதா, பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளைத் தயாரிக்கிறார்களா, பட்டாசு மருந்துகள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா உள்ளிட்ட விஷயங்களை ஆய்வு செய்த அவர்கள், அங்கு பணியிலிருந்த பட்டாசு தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், ‘பொதுமக்கள் பாதுகாப்போடு தீபாவளியை கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டார். புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிறப்பு தீக்காயம் வார்டுகள் அமைக்கப் பட்டுள்ளதாகவும் காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருப்பதாகவும் துணைநிலை ஆளுநர் தெரிவித்தார்.

எப்போதெல்லாம் நாம் கோரிக்கை வைக்கிறோமோ அப்போதெல்லாம் மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே அவர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் மத்திய அரசும், புதுச்சேரி அரசும் உடனிருக்கும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.