பெண்களை தொழில் முனைவோராக மட்டுமின்றி, தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்ற, அரசு எப்போதும் துணை நிற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மகளிர் சுய உதவி குழுவினர் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை பார்வையிட்டு, அவர்களை ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் உள்ளிடோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து, 58 ஆயிரத்து 453 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்களுக்கு, 2 ஆயிரத்து 749 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பில், கடனுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த, முதலமைச்சர் ஸ்டாலின். பின்னர் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடினார்.
இதனையடுத்து, நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக ஆட்சியில்தான் முதன்முதலில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டதாகவும், பெண்கள் முன்னேற்றத்திற்காக, அடித்தளம் அமைத்து கொடுத்தது திமுக ஆட்சிதான் எனவும் தெரிவித்தார்.
உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மகளிர் சுயஉதவிக்குழுக்களை அதிகளவில் ஊக்குவித்ததாகவும் தற்போது, சிறப்பு முகாம்கள் அமைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, கடன் வழங்குவதை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பெண்களை தொழில் முனைவோராக மட்டுமல்லாது, தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றும் முயற்சிக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.