‘சாலையோரம் வசிக்கும் மக்களை நிச்சயம் அரசு பாதுகாக்கும்’

சாலையோரம் வசிக்கும் மக்களை நிச்சயம் அரசு பாதுகாக்கும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலை, தங்க சாலை, மண்ணடி மெட்ரோ அருகில் உள்ள பொது பண்டக சாலையை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும்…

சாலையோரம் வசிக்கும் மக்களை நிச்சயம் அரசு பாதுகாக்கும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை வால்டாக்ஸ் சாலை, தங்க சாலை, மண்ணடி மெட்ரோ அருகில் உள்ள பொது பண்டக சாலையை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தா.மோ அன்பரசன், துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு சாலைகளில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதி இல்லாமல் வாழ்ந்து வருவதாகத் தொகுதியின் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கோரிக்கை வைத்ததை எடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘அதிமுக தலைமை அலுவலகத்திற்குக் கூடுதல் பாதுகாப்பு’

தொடர்ந்து பேசிய அவர், சாலையில் வசிக்கும் அனைத்து மக்களையும் அப்புறப்படுத்தி அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டி தருவதற்காக வால் டாக்ஸ் சாலையில் மாநகராட்சிக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை அருகில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் இடம், மண்ணடி பிரகாசம் சாலையில் பள்ளிக்கல்வித்துறைக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித் தருவதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று விரைவில் பணிகள் தொடங்கப்படும் எனவும், சாலையோரம் வசிக்கும் மக்களை நிச்சயம் அரசு பாதுகாக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.