மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா விவகாரம் தொடர்பான பிரச்னைக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சிக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது. தமிழ்நாடு அரசை ஆலோசிக்காமல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மேலும், வேந்தருக்குப் பிறகு இணை வேந்தர்தான் இருக்க வேண்டும். ஆனால், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் கெளரவ விருந்தினர் என ஒன்றிய இணை அமைச்சர் பெயர் போடப்பட்டிருக்கிறது. விழாவில் கெளரவ விருந்தினராக இணை அமைச்சர் எல்.முருகன் அழைக்கப்படதன் நோக்கம் என்ன. பல்கலைக்கழக இணை வேந்தரான என்னை கலந்தாலோசிக்காமல் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறார் என்று கூறி விழாவை அமைச்சர் புறக்கணித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் 54 ஆவது பட்டமளிப்பு விழா, இன்று ஜூலை 13 இல் நடைபெறுகிறது. இதில், பல்கலைக் கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கி உரை நிகழ்த்துகிறார். மேலும், இவ்விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக் கழக இணை வேந்தருமான க.பொன்முடி வாழ்த்துரை வழங்குவார். ஒன்றிய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை ஆற்றுவார். இந்திய அறிவியல் நிறுவன உயிரியல் அறிவியலுக்கான தேசிய மைய இருக்கை பேராசிரியர் ப.பலராம் முதன்மை விருந்திரனராக பங்கேற்று, பட்டமளிப்பு விழா உரையாற்றுவார் என்று பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கின்றது.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் இந்தப் பட்டமளிப்பு விழா குறித்து பல்கலைக் கழக இணை வேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி கவனத்திற்கு வராமலேயே பல்கலைக் கழக நிர்வாகம் பட்டமளிப்பு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது. தமிழக உயர்கல்வித் துறை மூலம் பல்கலைக் கழக நிர்வாகத்திடம் இது பற்றி விளக்கம் கேட்டபோது, பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற முறையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழிகாட்டுதலுடன் இவ்விழா நடைபெறுவதாகவும், விழாவில் பங்கேற்போர் குறித்து ஆளுநரே முடிவெடுத்து பட்டமளிப்பு விழா தேதியையும் உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.
“பட்டமளிப்பு விழாவில் இணை வேந்தர் உரையாற்றிய பிறகு ஒன்றிய இணை அமைச்சர் உரையாற்றும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டு இருப்பது மரபு மீறலாகும். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனை இவ்விழாவுக்கு அழைத்திருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், முறையாக தமிழக அரசின் உயர்கல்வித் துறையிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்” என்று தமிழக அரசு சார்பில் துணை வேந்தரிடம் அறிவுறுத்தப்பட்டபோது, “எனக்கும் எதுவும் தெரியாது. பட்டமளிப்பு விழா குறித்த அனைத்து நிகழ்வுகளும் ஆளுநர் அலுவலகம்தான் மேற்கொண்டது” என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.
ஆளுநர் மாளிகை அலுவலர்களுடன் தமிழக அரசின் அதிகாரிகள் தொடர்புகொண்டு கேட்டபோது, “நாங்கள் அப்படிதான் அழைப்போம். என்ன முடியுமோ அதைச் செய்து கொள்ளுங்கள்” என்று மரியாதையின்றி பேசுகின்றனர். இவ்வாறு ஆளுநர் வரம்பை மீறி பல்கலைக் கழகச் செயல்பாடுகளில் தலையிடுவதால், அதைக் கண்டிக்கும் விதமாக “பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம்” என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் அடாவடியான செயல்பாடுகள், போட்டி அரசு நடத்துவதைப் போல இருக்கிறது.
மதுரை காமராசர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவை அரசியல் மேடையாக்குவதற்கு வழிவகுத்துத் தந்துள்ள ஆளுநரின் நடவடிக்கை கடும் கண்டத்துக்கு உரியதாகும். தமிழக ஆளுநர் தனக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று நினைத்துச் செயல்படுவதையும், பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா