சென்னை – புதுச்சேரி இடையே கடல்வழிச் சரக்குப் போக்குவரத்துத் தொடங்கிய நிலையில், சென்னைத் துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு முதல் சரக்கு கப்பல் புதுச்சேரிக்கு வந்தடைந்தது.
சென்னை துறைமுகத்தில் இருக்கும் இடநெருக்கடியை சமாளிக்க புதுச்சேரி துறைமுகத்தை, அதன் துணை துறைமுகமாகச் செயல்பட ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி மத்திய அரசின் ‘சாகர்மாலா’ திட்டத்தின்கீழ் புதுச்சேரி துறைமுகம் ரூ.40 கோடி செலவில் ஆழப்படுத்தப்பட்டது. மேலும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கேரளாவில் இருந்து வந்த கப்பல், தனது ஆய்வுப் பணியை முடித்துக்கொண்டு, கண்டெய்னர்களை ஏற்றி வருவதற்காக கடந்த 26 ஆம் தேதி சென்னை துறைமுகம் சென்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், சென்னை துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு முதல் கப்பல் புதுச்சேரி துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இந்த சரக்கு கப்பல், நாளை முதல் புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்கிறது.
இதையும் படியுங்கள் : களக்காடு : வாழைத்தார்கள் விலை கடும் வீழ்ச்சி – விவசாயிகள் கவலை
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்கள் புதுச்சேரி துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அங்கு அமைக்கப்பட்டுள்ள சுங்கத்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. பின்னர் ஏற்றுமதிக்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அங்கிருந்து சென்னை துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய பெரிய கப்பலில் ஏற்றப்படுகிறது. இதன் மூலம் சென்னை துறைமுகத்தில் இடநெருக்கடி உள்ளிட்ட கூடுதல் சுமை குறைகிறது.
மேலும் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கடல்வழியாக சரக்குகளை கொண்டு வருவதால் சாலைபோக்குவரத்து நெரிசல்கள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. புதுச்சேரி துறைமுகத்தில் கண்டெய்னர்கள் கையாளும் பணி அதிகம் நடைபெறும்பட்சத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது எனப் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
– ரெ.வீரம்மாதேவி