சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், 3000 பக்கம் ஆதார ஆவணங்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத்துறையினர் விசாரித்து வந்தனர். கடந்த 7ம் தேதி முதல் 5 நாட்களாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. காவல் முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு அவரை அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
சுமார் 3 ஆயிரம் பக்க ஆதார ஆவணங்களுடன் 120 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அனைத்து ஆவணங்களையும் இரும்பு பெட்டியில் வைத்து, அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.







