அரசு பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு பயணிகள் அமர்ந்திருந்த நிலையில், நடத்துநர் தூங்கிக் கொண்டிருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த பச்சூர் பகுதியில், திருப்பத்தூரில் இருந்து ஆந்திர எல்லை பகுதியான கொத்தூர் வரை B7 என்னும் அரசு பேருந்து செல்வது வழக்கம். இந்நிலையில், பேருந்தில் பயணிகள் அமர்ந்திருக்கும் போதே, ஓட்டுநர் வெங்கடேசன் மற்றும் நடத்துநர் புஷ்பராஜ் இருவரும் பேருந்தை ஓரங்கட்டி நிறுத்தியுள்ளனர். பின்னர் நடத்துனர் புஷ்பராஜ் பேருந்திலேயே உறங்கியிருக்கிறார்.
இந்நிலையில், பஸ்ஸிலேயே நடத்துநர் உறங்கிக் கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக திருப்பத்தூரில் இருந்து ஆந்திரா எல்லைப் பகுதி கொத்தூர் வரை, நாள்தோறும் ஐந்து முறை பேருந்து சென்று திரும்ப வேண்டும். ஆனால் இப்பேருந்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மட்டுமே செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியள்ளனர். மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







