ஓபிஎஸ்-ஐ வைத்து அதிமுகவை உடைக்கலாம், கலவரம் செய்யலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்க வேண்டாம் என மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதற்கும், ஆன்லைன் ரம்மி விளையாட்டினை தடைசெய்ய வலியுறுத்தியும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், தேர்தல் நேரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள், நிறைவேற்றவில்லை எனவும் குற்றம்சாட்டினார். மேலும், கேஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும், பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை எதையும் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்குத் தாலிக்குத் தங்கம் திட்டத்தினை பறித்த அரசாகவும், அம்மா இருசக்கர வாகன திட்டத்தை நிறுத்தி, அம்மா உணவகத்தை முடக்கியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்கள் விலைவாசி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கொரானோ காலத்திலும் விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எனத் தெரிவித்தார். மேலும், ஏழை மக்களின் பணத்தை திமுக அரசு கொள்ளை அடித்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், ஏழை எளிய மக்கள் பயன்படுத்துகிற அரிசி, பருப்பு, தானியம், பால் உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் 5 சதவிகித வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆய்வுக் கூட்டத்தில் ஏன் 5 சதவிகித வரி விதிப்பிற்கு நிதி அமைச்சர் எதிர்க்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியாமல் கனவு உலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடத்தில் இருந்த நிர்வாகத் திறமை தற்போதைய முதலமைச்சரிடம் இல்லை எனச் சாடினார். மேலும், இன்று வீட்டு உபயோக மின்சார கண்டன உயர்வை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு அடுத்து, விவசாயிகள் பயன்படுத்தும் இலவச மின்சாரத்திற்கும் கட்டணம் செலுத்தச் சொல்வார்கள் எனவும் மத்திய அரசை எதிர்க்கும் அரசாக திமுக அரசு இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், ஓபிஎஸ்-ஐ வைத்து அதிமுகவை உடைக்கலாம், கலவரம் செய்யலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்க வேண்டாம் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஏன் அமைச்சர்கள் சென்று மாணவியின் குடும்பத்தாரைச் சந்திக்கவில்லை எனக் கேள்வி எழுப்பிய அவர், தமிழ்நாட்டில் ஜாதி கலவரத்தை உருவாக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முயல்வதாகவும், தினந்தோறும் காவல் பணியைச் செய்யாமல் நடைப்பயிற்சியைச் செய்யும் டிஜிபி தமிழ்நாட்டில் செயல்படுவதாகக் குற்றச்சாட்டினார்.