கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவுகளை மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில், கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக ஆதரவு பெற்ற சுதா 2553 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டு, பின் அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திர வடிவு என்பவர் 3 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரியான வட்டார வளர்ச்சி அலுவலரால் அறிவிக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து திமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் சுதா கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த நீதிமன்றம், 30-12-2019 அன்று நடந்த சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையை 15 நாட்களுக்குள் மீண்டும் நடத்துவதற்கு உரிய அதிகாரிகளை நியமிக்க வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
மேலும், மறு வாக்கு எண்ணிக்கையை ஒளிப்பதிவு செய்து அதை நீதிமன்றத்தில் சமர்பிக்கவும் , மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை கொண்டு அடுத்தக்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிமன்ற ஆணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.







