சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’அயலான்’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், சரத் கெல்லார், யோகிபாபு, கருணாகரன், பானுப்பிரியா உட்பட பலர் நடித்துள்ள படம், ’அயலான்’. ’நேற்று இன்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.
சயின்ஸ் பிக்சன் படமான இதை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கக் கோரி டேக் என்டெர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தங்கள் நிறுவனத்திடம் இருந்து 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்ற ரூ.5 கோடி கடனை வட்டியோடு திருப்பி செலுத்தும்வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ’அயலான்’ படத்தை வெளியிட 2022 ஆம் ஆண்டு ஜனவரி 3 ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.








