“நயனில் சொல்லினுஞ் சொல்லும், சான்றோர்,
பயனில் சொல்லாமை நன்று”
என்பது வள்ளுவர் நமக்கு வகுத்தளித்த பண்பாட்டு வழி.
அதாவது “அறிவுடையோர், அறம் அல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லக்கூடாது” என்கிற மாண்புதனை கடைபிடிக்க வலியுறுத்துகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குருக்ஷேத்திரப் போர் முடிவுக்கு வந்தது. அர்ஜுனன், தன் தேர்மீது இருந்தவாறு, வலம் வந்து, எவ்வளவு பெரிய யுத்தம், எவ்வளவு இழப்புகள் என்று நினைக்கும் மாத்திரத்தில் தான் பெற்ற வெற்றியின் பெருமிதம் அவனை ஆக்கிரமித்துக் கொண்டது. தன்னை விட சிறப்பான வீரன் யாராவது உண்டா என்ன… என்கிற கர்வம், அவனை மாயவலையில் வீழ்த்த, தலை நிமிர்த்தி சிலிர்த்தான். ஒரு மந்தகாசப் புன்னகை, அவனைக் கிறங்க அடித்தது.
அண்மைச் செய்தி – காதலை நிராகரிப்பது குற்றமா? கண்ணீர் தான் மிச்சமா?
அப்போது ,தேர்க் குதிரைகளின் கடிவாளத்தை இறுகப் பற்றியிருந்த கிருஷ்ணர், போர் முடிந்தது இன்னும் தேரிலிருந்து அர்ஜுனன் இறங்காத காரணம் என்ன என வினவினார்.
அர்ஜுனனோ, தாம் பெற்ற மகத்தான வெற்றியின் மிதப்பில், வெற்றி வீரன் ஒருவனை, அவனது தேரோட்டித் தனது கைபிடித்து இறக்கி விடுதலே, அந்த வீரனுக்கு பெருமை
என்று கர்வமாக பேசினான். ஆனாலும் கிருஷ்ணர் அதைக் காதில் வாங்காதவர் போல, மீண்டும் கீழே இறங்கச்சொல்ல, அர்ஜுனனும், சிறிய மன வருத்தத்துடன் கீழே குதிக்க,
கிருஷ்ணர், அவனைப்பார்த்து, “தேர் அருகில் நிற்காதே, உடனே தள்ளிப் போய் நில்” எனக் கட்டளைப்போலக் கூற, அர்ஜுனன்,வியந்து காரணம் புரியாமல் குழப்பத்துடன், சிறிது தூரம் சென்று நின்றான். வெற்றி பெற்றவனை நடத்தும் செயலா இது? என்கிற பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டு,காற்றில் கலந்தது. தூரத்தில் முகம் வாட நின்றிருந்த அர்ஜுனனைப் பார்த்து, கிருஷ்ணரின் மனம் கனத்தது. புன்முறுவலுடன், தேரில் கட்டப்பட்டிருந்த கொடியினை வணங்கி அவிழ்த்துக் கொண்டு,
கீழே குதித்து, “அர்ஜூனா” என்று பரவசத்துடன் அழைத்துக்கொண்டே, அவனருகில் சென்றார்.
அர்ஜுனன் திகைப்புடன் இவரின் செயல்களைப் பார்த்துப் பக்தியுடன் நின்றான். அர்ஜுனனை ஆரத்தழுவிக் கொண்டு, உச்சி மோந்து, அன்பு செலுத்தினார் கிருஷ்ணர்.
கிருஷ்ணர் தேரை விட்டு இறங்கிய அடுத்த கணம், தேர் திகு திகுவென தீப்பிடித்து , கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. அதைப்பார்த்த அர்ஜுனன் அதிர்ச்சியில் உறைந்து போனான். ஒன்றுமே புரியாமல், இது என்ன நிகழ்வு? ஏன் இப்படி என்று குழப்பத்துடன், கிருஷ்ண பரமாத்மாவை கவலையுடன் பார்க்க, புன்னகையுடன் அதற்கான காரண, காரியங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.
“அர்ஜுனா, உக்கிரமாக போர் நடந்து கொண்டிருந்த போது, ஏராளமான, மிகவும் சக்தி வாய்ந்த அஸ்திரங்கள் பலவும், உன் மீது ஏவப்பட்டது. இந்தத் தேரில் கிடந்தது. பல அஸ்திரங்களை நானும், தேர்க் கொடியிலிருந்த அனுமனும், தடுத்துத் தடுத்து, அவற்றின் சக்திகளை செயலிழக்கச் செய்தோம். நானும்,அனுமனும் இறங்கிய பின்னர், அஸ்திரங்கள் வீரியம் பெற்று, தேர் எரியத் தொடங்கியது.”
இதைச் சொல்லி முடிக்கும் போது, ஆச்சரியமான, அச்சம் தரும் விஷயத்திலிருந்து தம்மைக் காத்த பகவானைத் துதிக்காது, மமதையில் பேசியதை எண்ணி மிகவும் வருந்தினான் அர்ஜுனன். ஆணவம் கொண்டவன் போல் நடந்து கொண்டதற்கு மனம் குமுறினான். பின்னர் தெளிவு பெற்று உணர்ந்தான். அதனுள்ளே கோலோச்சிய சிறிது
தற்பெருமை, அகம்பாவம், ஆணவம் அனைத்தும் அழிந்தொழிந்து போக, கிருஷ்ணரை ஆலிங்கனம் செய்து, தன் சிறிது நேரத் தவற்றுக்கு மானசீகமாக மன்னிப்பு கேட்டு நின்றான் அர்ஜுனன்.
இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமாகில் , அதன் பெயர் “பக்தி” என்பது எவ்வளவு சத்தியமான வார்த்தை.
-சுப்பிரமணியன்