தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் மின் விநியோகம் உயர்ந்துள்ளது என அரசுக்கு மத்திய அரசு எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய சராசரி அளவைவிட கூடுதலாக வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்த தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் ”ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய அளவில் 2018-2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 70 நிமிடங்களாக வழங்கப்பட்டு வந்த நிலையில், 2021-2022 ஆம் ஆண்டில், அது நாளொன்றுக்கு 20 மணி நேரம் 53 நிமிடங்களாக இருந்தது.
ஆனால், தமிழ்நாட்டில் 2018-2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 77 நிமிடங்களாக ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் விநியோகம், 2021-2022 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, ஆர்.கே.சிங் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்” என கூறப்பட்டது.
மேலும், தமிழ்நாட்டில் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட ஏதுவாக, 24 மணி நேரமும் மின் விநியோகத்தினை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உதவி செய்யும் என்றும் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.







