முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மத்திய அரசு சித்திரவதை செய்வதாக தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முதலமைச்சரை வாழ்த்தியும் அரசின் திட்டங்களை புகழ்ந்தும் எழுதப்பட்ட பாடலுக்கு மாணவிகள் பரத நாட்டிய நடனம் ஆடினர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ”மாநிலத்திற்கு தர வேண்டிய நியாயமான நிதியை தராமல், முதலமைச்சரை மத்திய அரசு சித்தரவதை செய்கிறது. ஆளுநராக வர வேண்டியவர்கள் முதலமைச்சருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால், இங்குள்ள ஆளுநர் ஒவ்வொரு நாளும் வாய் திறந்து பேசினாலே முதலமைச்சருக்கு அரசியல் நெருக்கடி ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற அலங்கோலங்களை சரி செய்ய, ஒன்றரை ஆண்டுகளாக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மதவாத, பாசிச சக்திகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம். என்ன நடந்தாலும், எந்த சூழலிலும் முதலமைச்சருடன் இருப்போம்” என்று பேசினார்.








