கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கு – நாளை விசாரணை!

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் சமீபத்தில் மற்றொரு கட்சிக்கு…

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த சில தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் சமீபத்தில் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.

இதனைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அப்போது, “நாம் தமிழர் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கி தர வேண்டும் என அக்கட்சியால் கோர முடியாது. உங்களுக்கு இந்த சின்னம் வேண்டும் என்றால் நீங்கள் முன்கூட்டியே தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருக்க வேண்டும். அப்போது தாமதம் செய்துவிட்டீர்கள்.
இப்போது கேட்டு என்ன பலன். அதோடு இந்த சின்னம் உங்களுக்கு ராசியான சின்னம் போலவும் தெரியவில்லை” என்று தெரிவித்து அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

 

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சிக்கு ஏன் கரும்பு விவசாயி சின்னத்தை கொடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், உரிய பதிலை இந்திய தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி எனவும், தேர்தல் வரி கட்டியுள்ளதோடு அனைத்து தேர்தல்களிலும் தாங்கள் பங்கேற்றுள்ளதால் தங்களுக்கே அந்த சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்திருந்தது.

 

தமிழகத்தில் வரும் 20ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளதால், வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு இன்று அல்லது நாளை வழக்கை விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்த நிலையில், கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.