இறப்பிலும் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த பெண்!

நாமக்கல் மாவட்டத்தில் மூளைச் சாவடைந்த பெண் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா, மோடமங்கலம் கிராமம், மேல்பாறை காடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி ஜெயமணி (52). இவரது மகள்…

நாமக்கல் மாவட்டத்தில் மூளைச் சாவடைந்த பெண் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா, மோடமங்கலம் கிராமம்,
மேல்பாறை காடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி ஜெயமணி (52). இவரது மகள் மல்லிகா கோவை, நீலாம்பூரில் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு வந்த ஜெயமணி ஜூன் 8ஆம் தேதி அவரது மகன் பூபதியுடன் இருசக்கர வாகனத்தில்
சின்னியம்பாளையம் சென்றார். அப்போது, ஹோட்டல் லீ மெரிடியன் அருகில் மாலை
6.45 மணிக்குத் திரும்பும்போது பின்னால் வந்த நான்கு சக்கர வாகனம் மோதியதில்
பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், ஜூன் 9ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது கணவர் பெருமாள் மற்றும் மகன், மகள்கள், ஜெயமணியின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டன. ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், கண்கள் மற்றும் தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி
கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். உடல் உறுப்பு தானம் வழங்கிய ஜெயமணி குடும்பத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.