ஆப்கனில் உள்ள பெண்கள் டாக்ஸியில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் தாலிபான் அமைப்பினர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதும், 20 ஆண்டுகள் கழித்து தாலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தனர். தாலிபான்கள் இஸ்லாமியத்தின் ஷரியத் சட்டத்தைப் பின்பற்றுவர். அதனால் ஆப்கனை கைப்பற்றியதிலிருந்தே பல பிற்போக்குத் தனமான உத்தரவுகளைத் அவர்கள் பிறப்பித்தனர். மனித உரிமைகளை, முக்கியமாக பெண் உரிமைகளைப் பறிப்பதில் குறியாக இருந்ததால் தாலிபான் அமைப்பினர் பிற நாடுகளிடம் இருந்து வெறுப்பையே சம்பாதித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1996-2001ல் இருந்த முதல் தாலிபான் அரசில் பல பிற்போக்கான விதிகளை நிலைநாட்டியதால் உலக நாடுகள் தற்போது வரை தாலிபான் அரசை அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் இந்த ஆட்சியின் தொடக்கத்தில், அனைத்து தரப்பும் ஏற்கும் படியான ஆட்சியாக இது இருக்கும் எனத் இந்த அமைப்பினர் கூறியிருந்தனர். கொடுத்த வாக்கைக் காற்றில் விட்ட தாலிபான்கள் தனது பிற்போக்குத் தனமான உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தொடங்கினர். இதனால் ஆப்கன் ஒரு போராட்டக் களமாக மாறியது.
தாலிபான்களின் முதல் உத்தரவுகளே பெண்களின் சுதந்திரத்தை முடக்கும் எண்ணத்தில் தான் இருந்தது. பெண்களும், ஆண்களும் ஒன்றாகப் படிக்கக் கூடாது, ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் வெளியே செல்லக்கூடாது, விதியை மீறிய பெண்களைச் சுட்டுக் கொள்வது, இளம் வயது பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் படி கட்டாயப்படுத்துவது, பெண்களால் பொறுப்புகளை சுமக்க முடியாது, அவர்கள் குழந்த்தையை மட்டும் தான் சுமக்க வேண்டும் எனக் கூறியது, பெண்களிடம் இருந்து படிப்பு, அரசியல், வேலை, விளையாட்டு ஆகியவற்றைப் பறித்தது போன்ற பல அடக்குமுறைகளைத் தாலிபான் அமைப்பினர் செய்து வந்தனர். காபூலில் இந்த அடக்குமுறைகளை எதிர்த்து முதல் போராட்டத்தைப் பெண்கள் நடத்தினர். ஆங்காங்கே தொடர் போராட்டங்கள் வெடிக்க, தனது சர்வாதிகார ஆட்சியால் அனைத்தையும் கட்டுபடுத்தியது தாலிபான் அரசு.
மேலும், ஆப்கனில் இருந்து வெளியேற ஏராளமானோர் காபூல் விமான நிலையத்தில் காத்திருந்த போது குடிநீர் பாட்டில்களின் விலை ரூ.3000 எனவும், ஒரு தட்டு உணவின் விலை ரூ. 7,000 எனவும் விலைவாசிகளை உயர்த்தினர். தாலிபான்களுக்குப் பயந்து லாரி ஓட்டுநர்கள் ஆப்கனிற்கு செல்ல பயந்ததால் அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டது. பத்திரிக்கையாளரின் குடும்பத்தினரைச் சுட்டுக் கொன்றது, வீடு வீடாக பத்திரிக்கையாளர்களைத் தேடி சோதனை செய்தது, டோக்கியோ பாராலிம்பிக்ஸில் பங்கேற்கவிருந்த 2 தடகள வீராங்கனைகளுக்குத் தடை விதித்தது, அதிகரித்த போதைப்பொருள் வர்த்தகம், ஆப்கனில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குள் புகுந்தது, பொழுதுபோக்கு பூங்காக்களை எரித்தது, போற்றக்கூடியவர்களின் சிலைகளைத் தகர்த்தெரிவது, மேற்கத்திய நாடுகளின் விளம்பர படங்களுக்கு வெள்ளையடித்தல், இசைக்கூடங்களில் உள்ள இசைக்கருவிகளைச் சேதம் செய்தது, ஆண்கள் கட்டாயமாக தாடி வளர்க்க வேண்டும் என உத்தரவிட்டது போன்ற பல அட்டூழியங்களைத் இந்த அமைப்பினர் செய்தது குறிப்பிடத்தக்கது.
தனது அராஜகங்களுக்குச் சற்றும் முற்றுப்புள்ளி வைக்க விரும்பாத தாலிபான், தற்போது பெண்கள் டாக்ஸியில் பயணிக்க புதிய உத்தரவுகளை அறிவித்துள்ளனர். அதில், 72 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள், ஆண் துணையோடு தான் பயணிக்க வேண்டும் என்றும், பர்தா அணியாமல் வந்தால் வாகனத்தில் பயணிக்க அனுமதிக்கக் கூடாது என்றும், பயணத்தின் போது பாடல்கள் கேட்கக் கூடாது என்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.