‘ஜெய்பீம்’ பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர்170 படத்தை அக்.4ம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெயிலர்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி ரஜினிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. கடந்த மாதம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரிலீசான இந்தப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. இதுவரை இருந்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனைகளை எல்லாம் முறியடித்து ‘ஜெயிலர்’ புதிய சாதனையை படைத்தது. இதனையடுத்து அடுத்ததாக த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி.
‘ஜெயிலர்’ படம் ரஜினி ரசிகர்களுக்கான பக்கா கமர்ஷியல் படமாக வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படம் மூலம் கவனம் ஈர்த்த த.செ.ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. இருளர் பழங்குடியினர் இந்த சமுதாயத்தில் நடத்தப்படும் விதம் குறித்து, அவர்களுக்கு நடக்கும் போலீஸ் ஒடுக்குமுறைகள் குறித்தும் அப்பட்டமாக இப்படத்தில் படமாக்கி இருந்தார் த.செ. ஞானவேல்.
இவரது இயக்கத்தில் ரஜினி நடிப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. எப்படியும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் தான் ‘தலைவர் 170’ படத்தில் ரஜினி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்திற்கான லுக் டெஸ்ட் எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்தது. இதனால் ‘தலைவர் 170’ படப்பிடிப்பு இந்த மாதமே துவங்கி விடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் கன்னியாகுமரி, நாகர்கோயில் பகுதிகளில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இப்படம் அக்.4ம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.







