துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழில் சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள துணிவு திரைப்படமும், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் நாளை ஒரே நாளில் வெளியாகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ் திரையுலகின் இரு முன்னணி நடிகர்களின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரு படங்களையும் சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட தடைக்கோரி தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த உயர்நீதிமன்ற மனுக்கள் நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, இரண்டு படங்களும் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளதாகவும் கூறினார்.
இரண்டு படங்களும் சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிடப்பட்டால் பெரும்
நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் வாரிசு படத்தை சட்ட விரோதமாக வெளியிட 4,548 இணையதள பக்கங்களுக்கும், துணிவு படத்தை 2,754 இணையதள பக்கங்களுக்கும் தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மனுதாரரின் வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி சி.சரவணன், துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.