டெல்லியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லி காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் நெளஷாத் மற்றும் ஜெக்ஜித் சிங் என்ற யாகூப் ஆகிய இரு தீவிரவாதிகளை கைதுசெய்தனர். பின்பு அவர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர். தீவிரவாதிகளின் செல்போன்களை பறிமுதல் செய்து சோதித்தபோது அவர் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி அதை வீடியோ எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக காவல்துறை விசாரித்தபோது அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி தங்கியிருந்த பகுதிக்கு பின்புறம் கழிவுநீர் கால்வாயில் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டது. இவர்கள் மீது யுஏபிஏ சட்டம் போட்டப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இருவருக்கும் 14 நாட்கள் காவல்துறை விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.
இதற்கிடையே அந்த வீடியோவை வெளிநாடுகளுக்கு இரு தீவிரவாதிகளும் அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருக்கலாம் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.







