எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. மீனவர்களை கைது செய்வதுடன் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து விடுவர். இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலும் அடைக்கப்படுவர். இதனை நிறுத்த அரசு நடவடிக்க எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இருப்பினும் இச்சம்பம் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போதும் அதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. நெடுந்தீவு பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 10 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், அவர்களது ஒரு விசைப்படகையும் சிறைபடைத்தது. தொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளத.
மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது அவர்களது குடும்பத்தினரையும், மீனவ மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கை கடற்படை அத்துமீறி நடவடிக்கை எடுத்து மீனவர்களை கைது செய்து இருப்பதாகவும், எனவே அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் சக மீனவர்களும், குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.







