திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஸ்ரீபூங்காவனத்தம்மன் கோயிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பல்வேறு பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த கேளூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகம் அன்று திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி இந்த ஆண்டும் மாசி மகம் திருவிழாவிற்காக பக்தர்கள் காப்பு கட்டி அம்மனுக்கு விரதம் இருந்தனர். 15 நடைபெறும் இத்திருவிழாவில் 10ம் நாளான நேற்று அம்மனின் தேர் பவனிவரும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சுமார் 30 அடி உயரம் உடைய அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கரகாட்டம், மயிலாட்டம், பம்பை உடுக்கை என பல வாத்தியங்கள் முழங்க அம்மன் தேர் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தது. தேர்த்திருவிழாவிற்கு ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார்
பலத்த பாதுகாப்பு அளித்தனர். மேலும் போளூர் தீயணைப்பு துறை சார்பிலும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
—-வேந்தன்








