‘தொழில்நுட்பக் கோளாறு சீரானது’ – மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு !

தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் ஆன்லைன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரயில் சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து விமான நிலையம், புறநகர் ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். மெட்ரோ ரயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளதால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று Whatsapp Chatbot மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகள் பெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் இப்போது சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம், வாட்ஸ்அப் சாட்பாட் (Whatsapp Chatbot) 8300086000 பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் அனைவரும் CMRL மொலைப் ஆப், Paytm, Phonepe, சிங்கார சென்னை கார்டு, CMRL டிராவல் கார்டுகள், பயணச்சீட்டு வழங்குமிடம் ஆகிய மற்ற வழிகள் மூலம் டிக்கெட்டுகளை பெறுமாறு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.