ஈரோடு அருகே ஆன்லைன் வகுப்பின்போது 12ஆம் வகுப்பு மாணவிகளை நடனமாட சொல்லியதாக புகார் எழுந்த நிலையில் ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கொரோனா பரவலால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால், மாணவ, மாணவியர் மொபைல் போனை உபயோகித்து வருகின்றனர். இந்தநிலையில், மாணவிகளுக்கு சில ஆசிரியர்கள் வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார்கள் எழுந்தன. சமீபத்தில் கோவையில் ஒரு பள்ளி மாணவி ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் மக்கள் மனதில் இருந்து நீங்காத நிலையில், கரூரிலும் ஒரு மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பயிலும், 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆசிரியர் திருமலைமூர்த்தி பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்துள்ளது. ஆன்லைன் வகுப்பில் மாணவிகளை நடனமான சொல்லியதாகவும், தகாத வார்த்தைகளால் பேசி பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாணவிகள் 1098 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், திருமலை மூர்த்தியை போக்சோவில் கைது செய்தனர். இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெற்றோருடன் மாணவர்கள், பள்ளியை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசனை பணி இடை நீக்கம் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டார்.