திண்டிவனம் அருகே டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து ரூ. 3.83 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த ஈச்சேரி கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்த மர்ம நபர்கள் 50 மதுபான பெட்டிகளை திருடி சென்றனர். இது குறித்து ஒலக்கூர் காவல் நிலையதில் டாஸ்மாக் கடை ஊழியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த ஈச்சேரி கிராமத்தில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகின்றது. இந்த மதுபான கடையில் வழக்கம்போல் நேற்று இரவு கடை பணியாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணிகளை முடித்துவிட்டு கடையை பூட்டி வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கிருஷ்ணமூர்த்தி கடையைத் திறப்பதற்காக வந்து பார்த்தபோது, கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்தார். பின்பு உள்ளே சென்று பார்த்த பொழுது மதுபானங்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கடை ஊழியர் கிருஷ்ணன் மூர்த்தி, டாஸ்மாக் அதிகாரிகளின் ஆலோசனையோடு ஒலக்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். காவல் நிலையத்திற்க்குக் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கடையை நேரில் ஆய்வு செய்ததோடு கடையில் சுமார் 50 மதுபானப் பெட்டிகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 3 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் என தெரிய வருகின்றது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.







