தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளதாக பொருளாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனாவிற்கு பிறகு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்து இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் நிறுவனம் (CMIE) தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 7.60 சதவிகிதமாக இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 7.83 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நகர்ப்புற பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 8.28 சதவிகிதமாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் உயர்ந்து 9.22 சதவிகிதமாக உள்ளது. அதே சமயம் கிராமப்புற பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.29 சதவிகிதத்தில் இருந்து 7.18 சதவிகிதமாக குறைந்துள்ளது.
வேலையின்மை விகிதம் நாட்டிலேயே அதிகபட்சமாக ஹரியானாவில் 34.5 சதவிகிதமாக உள்ளது. அதேபோலவே, ராஜஸ்தானில் 28.8, பீகாரில் 21.1, ஜம்மு காஷ்மீரில் 15.6 சதவிகிதமாக வேலைவாய்ப்பின்மை உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மார்ச் மாதம் 4.1 சதவிகிதமாக ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 3.2 சதவிகிதமாக குறைந்துள்ளது.
அதே சமயம் ஏப்ரல் மாதத்தில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மற்றும் வேலை வாய்ப்பு விகிதம் அதிகரித்துள்ளது எனவும், இது நல்ல முன்னேற்றம் எனவும் என சிஎம்ஐஇ நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் வேலைவாய்ப்பு விகிதம் 36.46 சதவீதத்தில் இருந்து 37.05 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.