கொரோனா தொற்று குறையத் தொடங்கியதை அடுத்து, தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய தளர்வுகள் இன்று அமலுக்கு வந்தன. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே பேருந்து இயக்கத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களைத் தவிர, 23 மாவட்டங்களில் இன்று முதல் பொது போக்குவரத்து தொடங்கியது.இதற்காக, ஒரு மாதத்திற்கும் மேலாகவே, பணிமனைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்துகள் தயார்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. பேருந்துகள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை 6 மணிமுதல் பேருந்து சேவை தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 955 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு 20 பேருந்துகளும், தூத்துக்குடி நகர்ப்புறத்தில் 80 சதவிகிதம் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 112 நகரப் பேருந்துகள், 163 புறநகர் பேருந்துகள் என 275 பேருந்துகள் இன்று முதல் வழக்கம்போல் இயங்க துவங்கின. தொற்று அதிகமுள்ள கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, தஞ்சை, கும்பகோணம், நாகை உள்ளிட்ட பகுதிகளை தவிர, தொற்று இல்லாத இதர பகுதிகளுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து நகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் பணிமனையில் இருந்து 46 புறநகர் பேருந்துகளும், 23 நகரப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. ஜெயங்கொண்டம் பணிமனையில் இருந்து 47 புறநகர் பேருந்துகளும் 23 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் 50 சதவிகிதம் பயணிகள் மட்டுமே பேருந்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் 450 அரசுப் பேருந்துகள் இயக்கத்திற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில், பயணிகளின் வரத்தைப் பொறுத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதிகளில் 70 சதவீதம் பேருந்துகள் காலை முதல் இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பேருந்துகளிலும் முகக்கவசம் அணியவும், பயணிகள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்