முழு ஊரடங்கையொட்டி கோயில்கள் மூடப்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில் வாசல்களில் திருமணங்கள் நடைபெற்றன.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதேபோல வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் வழிபாடு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளது.
எனினும் திருமண விழாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடலூர் அருகே உள்ள தேவநாதசாமி கோயிலுக்கு 10க்கும் மேற்பட்ட மணமக்கள் வருகை தந்தனர். கோயிலுக்குள் திருமணம் செய்ய நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால் கோயில் வாசலில் திருமணம் செய்துகொண்டனர். அப்போது அங்கு குவிந்திருந்த ஏராளமானோர் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதேபோல் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எளிமையான முறையில் திருமணங்கள் நடத்தப்பட்டன. முழு ஊரடங்கையொட்டி கோயில் திறக்கப்படாததால் கோயிலின் வாசலில் ஏராளமானோர் திருமணம் செய்து கொண்டனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக குறைவான உறவினர்கள் மட்டும் திருமண விழாவில் அனுமதிக்கப்பட்டனர்.







