இங்கிலாந்து அணியின் சாதனையை முறியடித்த தமிழ்நாடு கிரிக்கெட் அணி

விஜய் ஹசாரே ட்ராஃபியின் லீக் சுற்றில் அருணாச்சலப் பிரதேசத்தை வீழ்த்திய தமிழ்நாடு அணி பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே ட்ராஃபி 2022 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

விஜய் ஹசாரே ட்ராஃபியின் லீக் சுற்றில் அருணாச்சலப் பிரதேசத்தை வீழ்த்திய தமிழ்நாடு அணி பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளது.

பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே ட்ராஃபி 2022 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் லீக் சுற்றில் இன்று தமிழ்நாடு அணி அருணாச்சல பிரதேச அணியுடன் மோதியது. பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சலப் பிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி, முதல் ஓவரிலிருந்தே ஆதிக்கம் செய்ய தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெகதீசனும், சாய் சுதர்சனும் அதிரடியாக விளையாடி ரன் மழை பொழிந்தனர். பவர்பிளேவின் முடிவிலேயே 100 ரன்களை குவித்த இந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப், ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் விளாசி எதிரணி பந்துவீச்சாளர்களை கதி கலங்கச் செய்தது.  முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவிக்கப்பட்டது.

சாய் சுதர்சன் 154 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அசுர ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெகதீசனும் 277 ரன்கள் குவித்திருந்த நிலையில் வெளியேறினார். இவர்களை தொடர்ந்து பேட்டிங் செய்த பாபா அபராஜித் மற்றும் பாபா இந்திரஜித் தலா 31 ரன்கள் குவித்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 506 ரன்கள் எடுத்தது.

507 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இரண்டாவதாக களமிறங்கிய அருணாச்சலப் பிரதேசம் இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 71 ரன்களில் சுருண்டது.இதனால் 435 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது. எலைட் சி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு அணி ஏற்கனவே லீக் சுற்றின் முதல் 5 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பதிவு செய்து, நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற இந்த போட்டியின் மூலம் தமிழ்நாடு அணி புதிய பல வரலாறுகளைப் படைத்துள்ளது.  அதன்படி,

1. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 500 ரன்களை கடந்த முதல் அணி என்ற பெருமையை தமிழ்நாடு அணி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் நெதர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 498 ரன்கள் குவித்திருந்ததே சாதனையாக அமைந்திருந்தது.

2. உலக அளவில், ஒரு ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இதுவே முதல் முறையாகும்.

3. விஜய் ஹசாரே கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற வரலாற்றையும் தமிழ்நாடு அணி படைத்துள்ளது.

4. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டுக்கு 400 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடி என்ற உலக சாதனையும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன்கள் குவித்த ஜோடி என்ற உலக சாதனையும் ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன் படைத்துள்ளனர்.

5. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தனிநபராக அதிகபட்ச ரன் குவித்தவர் என்ற பெருமையை ஜெகதீசன் பெற்றுள்ளார்.

6. தொடர்ச்சியாக 5 சதங்கள் விசாசிய முதல் வீரர் என்ற பெருமையை ஜெகதீசன் பெற்றுள்ளார்.

7. இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் 15 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் ஜெகதீசன் பெற்றுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.