தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 3ஆம் அலை டிசம்பர் இறுதியில் தொடங்கியது. ஜனவரி தொடக்கத்திலிருந்து மளமளவென உயர்ந்து, சில நாட்களாக 20 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வருகிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,39,923 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 22 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,989 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 12,484 பேர் குணமடைந்தனர். இதுவரை நலம்பெற்றவர்களின் எண்ணிக்கை 27,60,458 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 1,42,476 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று 8,987 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 6018 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 57591 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மற்ற மாவட்டங்களைப் பொறுத்தவரை செங்கல்பட்டில் 2,701 பேருக்கும், திருவள்ளூரில் 1273, கோவையில் 1866, கன்னியாகுமரியில் 678, மதுரையில் 569, சேலத்தில் 529, காஞ்சிபுரத்தில் 831, திருச்சியில் 453 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.







